சென்னை: "மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் பொன்விழா ஆண்டு இன்று (நவ.18) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கால்பந்தாட்ட மாணவி பிரியா மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மாணவி பிரியா விவகாரத்தில், முதல்நாள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன்.
அடுத்தநாள், உடனடியாக மருத்துவ விசாரணக்காக ஒரு குழு அமைத்தோம். குழுவினர் விசாரணை நடத்தி, மருத்துவர்களின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று அறிக்கை அளித்தனர். அன்றிரவு விசாரணை அறிக்கை கிடைத்தது. அதற்கு அடுத்தநாளே பத்திரிகையாளர்களை சந்தித்து, கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அந்த இரண்டு மருத்துவர்களும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்றுகூறி, ஒருவரை தூத்துக்குடிக்கும், மற்றொருவரை நெல்லைக்கும் இடமாற்றம் செய்தோம்.
அதோடு மட்டுமின்றி, அந்த குழந்தையை நானே மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து நீண்ட நேரம் உரையாடினேன். மாணவியின் பெற்றோரிடமும் பேசி கொண்டிருந்தேன். அப்போது மாணவிக்கு உடல்நலம் தேறியவுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தேன். அதேபோல், பெங்களூரிலிருந்து அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய பேட்டரி கால் வாங்கி கொடுப்பதாக நாங்களாகவே உறுதியளித்தோம். மருத்துவ துறையினருக்கும், குழந்தையின் காயங்கள் ஆறியவுடனே பேட்டரி கால்களை ஆர்டர் செய்ய வலியுறுத்திவிட்டு வந்தேன்.
அன்று இரவுதான் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் இடையிலான இரத்த ஓட்டம் முழுமையாக நின்றுவிட்டதன் விளைவாக பிரியா நம்மை விட்டு பிரிந்தார். தகவல் கிடைத்தவுடனே வந்து, மருத்துவமனையில் அந்த குழந்தையைப் பார்த்தேன். அவரது தந்தை உடற்கூறாய்வு வேண்டாம் என்று கூறினார். உடற்கூறாய்வு செய்தால்தான், மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தவறு செய்திருந்தால், அதை உறுதிப்படுத்த முடியும். எனவே உடற்கூறாய்வு செய்வது நல்லது என்று நான்தான் மாணவியின் தாய், தந்தை மற்றும் 3 சகோதரர்களையும் சமாதானப்படுத்தினேன்.
மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 secs ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
5 hours ago
வாழ்வியல்
59 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago