கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு - கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், முபின் வீடு உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தவும் என்ஐஏ முடிவு செய்துள்ளனர்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வயர்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, கோவையைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முக மது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததாலும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும் இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும், என்ஐஏ டிஐஜி வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் மேற்பார்வையில், விசாரணை அதிகாரி விக்னேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதி, கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், புகார் அளித்த அர்ச்சகர் சுந்தரேசன் வீடு உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், புகார் அளித்த அர்ச்சகர் மற்றும் சம்பவம் தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தும் பணியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில், அப்சர்கானை தவிர மீதமுள்ள 5 பேரையும், வழக்கை ஏற்கெனவே விசாரித்த உக்கடம் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ மேற்கொண்டுள்ள சூழலில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும், தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த முபின் தங்கியிருந்த வீடு, கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்