கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு விசாரணை என்ஐஏ-க்கு மாற்றமா?

By டி.ஜி.ரகுபதி

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு வழியாக டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் கார் இரண்டு துண்டுகளாக உடைந்து உருக்குலைந்தது. விபத்தில் காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் விசாரித்தனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம், கூட்டுசதி, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, உயிரிழந்த ஜமேஷாவின் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் 60 கிலோ, வயர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும், சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு ஜமேஷா முபின் தன் வீட்டில் இருந்து பெரிய மூட்டையில் பொருள் ஒன்றை சிலருடன் இணைந்து எடுத்துச் செல்வது தெரியவந்தது.

டிஐஜி, எஸ்.பி முகாம் : எனவே, காரில் வெடி மருந்து கடத்தப்பட்டு இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரிப்பதற்காக என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான என்.ஐ.ஏ குழுவினர் கோவைக்கு வந்தனர். இவர்கள், கோவையில் மாநகர காவல்துறையினர் உயரதிகாரிகளை சந்தித்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். தொடர்ந்து கார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டு விசாரிக்க உள்ளனர்.

இந்த வழக்கு தற்போது வரை மாநகர காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல்களை திரட்டினாலும், இந்த வழக்கு விசாரணை இன்னும் அதிகாரபூர்வமாக என்ஐஏ வசம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. விரைவில் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

49 mins ago

வாழ்வியல்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்