சென்னை: “அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டுதலுக்கு எதிராக மத்திய அரசு மொழிப் பாகுபாடு செய்துவருகிறது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஹெச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்ற தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும் கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிக் கல்வி நிறுவனங்களிலும் பயிற்று முறையாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு தனது பரிந்துரையை குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கிறது. மேலும், அரசின் வேலை வாய்ப்புக்கான எழுத்துத் தேர்வுகளில் கேள்வித்தாளை ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. அத்தியாவசியமான இடங்களில் மட்டும் ஆங்கில பயன்பாடு இருக்கலாம், அதுவும் படிப்படியாக இந்தியை கொண்டு முழுமையாக மாற்றப்பட வேண்டும் எனவும் இந்தக் குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையாக இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்; அரசு நிகழ்வுகள் அனைத்தும் இந்தியில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பதில் ஆண்டு பணி செயல் திறன் அறிக்கையில் இணைக்கப்பட வேண்டும் என்றும் வேலைவாய்ப்பு நேர்காணலில் தகுதியான நபர்கள் இந்தி தேர்ந்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்தப் பரிந்துரை கூறுகிறது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள், ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் இந்தி மொழி தெரிந்தவர்களுக்கே கிடைக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது. மொழி அடிப்படையிலான பாகுபாடு இருக்கக் கூடாது என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க முயல்கிறது.
இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி இதர மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் இந்தக் குழுவின் பரிந்துரையை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற சங்பரிவாரின் நோக்கத்தை நிறைவேற்றும் வழியில்தான் இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பன்முகத்தன்மைக்கும் பன்மைத்துவ கலாசாரத்திற்கும் வேட்டு வைக்கும் இந்த முயற்சியை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களிடையே பிளவுகளை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago