மதுரை மாநகராட்சி பொறியாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட அரசு: திரும்பி வந்த ‘அரசியல்’ பின்னணி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுரை மாநகராட்சியில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மாநகராட்சி பொறியாளர் (பொ) அரசு, தற்போது மீண்டும் மதுரை மாநகராட்சி பொறியராளராக (பொ) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திரும்பி வந்ததின்பின்னணியில் அரசியல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாநகராட்சி பொறியியல் துறையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் என்ற அடிப்படையில் பணி நிலைகள் உள்ளன. கடந்த காலத்தில், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சியில் மட்டுமே பொறியியல் பிரிவில் தலைமை பொறியாளர் அந்தஸ்து இருந்தது. பிற மாநகராட்சிகளில் மாநகரப் பொறியாளர் இருந்தார்.

ரூ.1,000 கோடி வரையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கவும், முடிவெடுக்கவும் தலைமை பொறியாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் பணியிடம் இருந்ததால் மெகா வளர்ச்சித் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவும், நிதி ஒதுக்கீடு பெறவும் வசதியாக இருந்தது. கடைசியாக மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளராக சக்திவேல் என்பவர் இருந்தார். அவர் ஒய்வுப்பெற்றதோடு மாநகராட்சி தலைமை பொறியாளர் பணியிடம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மாநகரப் பொறியாளர் பணியிடத்திலே தற்போது வரை தலைமைப் பொறியாளர் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சக்திவேலுக்கு பிறகு, மதுரை மாநகர பொறியாளராக மதுரம் என்பவர் செல்வாக்குடன் செயல்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ செயல்படுத்தும்போது மதுரம் ஈரோடு மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் எப்படியாவது மீண்டும் மதுரைக்கு வர பெரும் முயற்சி செய்தார். அது தற்போது வரை கைகூடவில்லை. மதுரம் இடமாற்றப்பட்ட நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் செயற்பொறியாளராக இருந்த அரசு என்பவர், மாநகர பொறியாளராக கூடுதல் பொறுப்பில் செயல்பட்டார்.

இடையில் கடந்த 2021 ஆண்டு நவம்பரில் அரசுக்கு பதிலாக கண்காணிப்பு பொறியாளர் சுகந்தி என்பவர், கூடுதல் பொறுப்பாக மாநகர பொறியாளராக நியமிக்கப்பட்டார். அரசு செயற்பொறியாளர் நிலையில் பணியை தொடர்ந்தார். அதன்பிறகு திடீரென்று சில மாதங்களிலே சுகந்தி இடமாற்றம் செய்ய்பட்டு மீண்டும் அரசு மாநகர பொறியாளராக (பொ) சில மாதம் செயல்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு, செல்வாக்குடன் மாநகர பொறியாளராக (பொ) இருந்த பணிக்காலத்தில்தான் முழுமையாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் குழு விசாரணை நியமித்து விசாரணை நடந்தது. இந்த சூழலில்தான் அரசு, திடீரென்று கோவை மாாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி பொறியாளராக இருந்த லட்சுமணன், மதுரை மாநகராட்சி பொறியாளராக நியமிக்கப்பட்டார். இவர் வந்து சில குறுகிய காலமே ஆனநிலையில் இவரது பணி மேயர் தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் செயற்பொறியாளர் அரசு, மீண்டும் மாநகர பொறியாளராக (பொ) நியமிக்கப்பட்டுள்ளார். லட்சுமணன், திருநெல்வேலி மாநகர பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு திட்டங்களை தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் வல்லவர் என்பதால், அவர் மீண்டும் மதுரைக்கு வருவதால் மேயர் தரப்பினர் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘முன்பு மதுரை மாநகராட்சி பொறியாளராக (பொ) இருந்த செயற்பொறியாளர் அரசு, மேயர் தரப்பிற்கு மிக நெருக்கமானவர். அதனாலே, மேயராக இந்திராணி வந்தபோது இவர் இடமாற்றம் செய்யப்படாமல் மதுரையிலே தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்கிய அமைச்சர் ஒருவர் அழுத்தம் காரணமாக அரசு, கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அதே அமைச்சர் சிபாரிசில்தான் அவர் மீண்டும் மதுரை மநகராட்சிக்கு மாறுதல் பெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை இருப்பதால் இந்த மாநகராட்சியின் செயல்பாடு தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மீண்டும் தலைமை பொறியாளர் பணியிடம் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், பெரிய திட்டத்திற்கான நிதியை கையாளுவதற்கு தற்போது மதுரை மாநகர பொறியாளர் சென்னைக்கு திட்டமதிப்பீடு அனுப்பி ஒப்புதல் பெறும்நிலை உள்ளது. அதனால், செயற்பொறியாளர் அந்தஸ்திலே மாநகர பொறியாளர் பணியிடத்தை பொறுப்பு பணியாக வழங்கி நிரப்பக்கூடாது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்