சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன.
அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும்தனிநபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அதில், ஆகம விதிகளைக் கடைபிடிக்காமல் தமிழக அரசு கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிக்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதையடுத்து, இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர்களின் பணி நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கடந்த 2021 அக்டோபரில் இடைக்காலமாக உத்தரவிட்டது.
அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் கோயில்களி்ல் இன்னும் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலமாக அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்தஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு அறநிலையத் துறை தரப்பில், கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் காலி இடங்களை நிரப்பகடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் செயல்அலுவலர்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, வழக்கின் தீர்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு நாளை (ஆக.22) இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
45 mins ago
விளையாட்டு
36 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago