சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இல்லாமல், 520 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். தொடர்ந்து `ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநர் ஹரிஹரன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ணசந்திரிகா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், 1794-ம் ஆண்டு மன நோயாளிகளுக்கான புகலிடமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் 1922-ம் ஆண்டு அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1947-ம் ஆண்டு புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு ‘அரசு மனநல மருத்துவமனை’ என்பது ‘அரசு மனநல காப்பகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது 1800 படுக்கை வசதிகளுடன் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய மனநல காப்பகமாக 24 மணி நேரமும் செயல்படுகிறது. தினமும் 350 புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இன்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற 520 பேர் பயனாளிகளாக இன்று (நேற்று) சேர்க்கப்பட்டனர். ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மருத்துவ திட்டம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்துடன் இணைந்து தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு மன நல காப்பகத்தில் செயல்பட உள்ளது.
ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை என்பது, போதை ஊசியால் உண்டாகும் பாதிப்புகளை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழிமுறையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ணசந்திரிகா கூறும்போது, “ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மருத்துவம் என்பது மாத்திரை சிகிச்சை முறையாகும். போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள், அதிலிருந்து விடுபட இந்த மாத்திரையை தினமும் உட்கொள்ள வேண்டும்.
2 ஆண்டுகள் மாத்திரையை உட்கொண்டால், போதை ஊசி பழக்கத்தில் இருந்து விடுபடலாம். அதேநேரத்தில் ஒரே போதை ஊசியை 4 அல்லது 5 பேர் போட்டுக் கொள்வதால் எச்ஐவி போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. மாத்திரையை உட்கொள்வதால் இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது. அரசு மனநல காப்பகத்துக்கு வந்து மாத்திரையை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், 1794-ம் ஆண்டு மன நோயாளிகளுக்கான புகலிடமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் 1922-ம் ஆண்டு அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1947-ம் ஆண்டு புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
12 mins ago
கல்வி
26 mins ago
சினிமா
34 mins ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
38 mins ago
விளையாட்டு
54 mins ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
2 hours ago