வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இன்றி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக குற்றச்சாட்டு

By ந. சரவணன்

வாணியம்பாடி: இரட்டை பிரவசத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மதன்குமார் (22). இவரது மனைவி கெளரி (20). நிறைமாத கர்ப்பணியான கெளரிக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 4.30 மணிக்கு அவர் அழைத்து வரப்பட்டார். கெளரி இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் பிரசவ வார்டில் அவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் கெளரிக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்தில் கெளரி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, கெளரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் கெளரி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, வாணியம்பாடி நகர காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெளரியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அரசு தலைமை மருத்துவரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இது குறித்து கெளரியின் கணவர் மதன்குமார் கூறுகையில், "இன்று அதிகாலை 4.30 மணிக்கு என் மனைவி கெளரி பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, பிரசவ அறைக்கு அழைத்துச்செல்ல ரூ.1000 தர வேண்டும் என செவிலியர்கள் கேட்டனர்.

வளைகாப்பு நிகழ்ச்சியின் போது கணவர் மதன்குமாருடன், உயிரிழந்த கர்ப்பிணி கெளரி (கோப்புப்படம்)

பணம் கொடுத்த பிறகே கெளரியை பிரசவ வார்டுக்கு செவிலியர்கள் அழைத்துச்சென்றனர். அப்போது, மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை. பின்னர் செவிலியர்கள் மருத்துவர்களுடன் தொலை பேசியில் தொடர்புகொண்டே என் மனைவிக்கு செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்த்தனர். அப்போது என் மனைவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் என் மனைவி இறந்துவிட்டதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

என் மனைவி உயிரிழப்புக்கு காரணமான செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் தான் அரசு மருத்துவமனையை தேடி வருகின்றனர். அவ்வாறு அவசரமாக வருவோரிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். பணம் தராவிட்டால் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை. நான் பணம் கொடுத்தும் என் மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.

மாவட்டம் நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மருத்துவம் மற்றும் பொது சுகாதார இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவிக்கு நேர்ந்த கொடுமை இனி எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது" என்று மதன்குமார் கூறினார்.

இது குறித்து புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக நகர காவல்துறையினர் உறுதளித்தின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கெளரியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து, கர்ப்பிணி வயிற்றிலிருந்து இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து 2 சிசுகளின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாத நிலையில், செவிலியர்களை மருத்துவம் பார்த்ததால் இரட்டை பிரசவத்திற்கு சேர்த்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

12 mins ago

சினிமா

25 mins ago

விளையாட்டு

31 mins ago

சினிமா

37 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்