அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற்ததில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன், கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால், கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த, அவர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை. கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அதிமுக அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்துவிட்டார். எனவேதான், அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார். வரும் 11-ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், தனக்குப் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இபிஎஸ் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று (ஜூலை 6) காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் "ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, கூட்டத்தை நடத்தலாம். ஆனால், இடைப்பட்ட நாள்களில் யாருக்காவது நிவாரணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி அமர்வை அணுகலாம்.

23 தீர்மானங்களை தவிர்த்த மற்ற தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில், தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 mins ago

தமிழகம்

34 mins ago

கல்வி

54 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்