பங்களிப்பு ஓய்வூதியம் | “அறியாமையைக் காட்டுகிறது அண்ணமாலையின் கருத்து” - சாடலுடன் நிதியமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து அண்ணமாலை வெளியிட்ட கருத்து, அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது” என்று சாடிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் PFRDA-வில் டெபாசிட் செய்ய வேண்டிய ரூ.10,436 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்யவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், "சமீபத்தில் அண்ணாமலை தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். இத்திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.

இத்தொகையை 2003-ம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேருவதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் ரூ.53,555.75 கோடியாக உள்ளது. இத்தொகையில் ரூ.41,264.63 கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூலப் பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதை தான் பின்பற்றினார்கள்.

இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதையும் மறைக்காமல், ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கெனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வைக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத் தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, அண்ணாமலையின் பேச்சு, அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் நோக்கத்தில் அமைந்துள்ளது. இது, அவரின் அறியாமையையும், நிதி மேலாண்மை குறித்து தக்க விவரங்கள் இல்லாமல் பேசும் வழக்கத்தையே வெளிப்படுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

29 mins ago

உலகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

45 mins ago

இந்தியா

49 mins ago

உலகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்