6,162 முழு நேர ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 6,162 முழு நேர ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூட்டுறவுத்ததுறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின்அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாசர், அனிதா ராதாகிருருஷ்ணன் ஆகியோர் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், "எனது தொகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாய விலைக் கடைகள் இருக்கின்றன. இதனால் அங்கு கூடும் கூட்டத்தின் காரணமாக பொருட்கள் வாங்கமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை இரண்டாக பிரிக்கவோ, அதேபோல் ஒன்றரை கிமீ. தொலைவுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் குறித்து ஆய்வு செய்து பகுதிநேர அங்காடிகள் பிரிக்கப்படுமா? அதோடு மட்டுமின்றி, 3 கடைகளுக்கு ஒரு விற்பனையாளர் பொறுப்பாக உள்ளார். எனவே பகுதிநேர கடைகள் பிரிக்கப்படும்போது அங்கு ஒரு விற்பனையாளரையும் நியமித்தால்தான் முழுமையாக பொருட்களை வழங்க முடியும் எனவே அதற்கான வாய்ப்பு உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "உறுப்பினர் துரை சந்திரசேகர் கூறியுள்ள கருத்து ஏற்கெனவே அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஆயிரம் அட்டைகள் உள்ள கடைகள், ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகள், 5,6 கிராமங்களை இணைத்து செயல்படுகின்ற கடைகள், தூரம் அதிகமாக உள்ள கடைகள் என இப்படி பல்வேறு நிலைகளில் கடைகள் பிரிக்கப்படாமல் இயங்கி வருகிறது. இதுதொடர்பாக அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதேபோல், நகர்ப்புறங்களில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகள் மிக நெருக்கடியான பகுதிகளில் அமைந்துள்ளன. நிறைய இடங்களில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ளது. அதுவும் சென்னையை சுற்றி அதிகமாக கார்டுகள் உள்ளன. இதுபோன்ற இடங்களில் வாடகை கட்டிடங்கள் கிடைப்பதோ, அரசு இடங்கள் இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே இதை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாநகராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகள், கிராமப்புற பகுதிகள் எங்கெங்கே அத்தியாவசியமாக இதைனைப் பிரித்தால் உண்மையாகவே பயனளிக்குமோ, அதற்கு அரசு, உணவுத்துறையுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். அதேபோல் ஒரு முழுநேர நியாய விலைக் கடையை நடத்த அதற்கான ஊதியம், செலவு அனைத்தும் சேர்த்து ஒரு 3 லட்ச ரூபாய் செலவாகிறது. கடைகளின் எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது, 6,162 முழு நேர கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதோடு 773 பகுதிநேர கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டியிருக்கிறது.

கடந்தாண்டு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட நிதிகளின் மூலம் தற்போது 150 கடைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருடன் பேசி, நிரந்தர கடைகள் அமைக்கும் பணியை பிரத்யேகமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

முழு நேர கடைகளை ரூ.10 லட்சத்திலும், பகுதி நேர கடைகளை ரூ.7 லட்சத்திலும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்டுகளின் எண்ணிக்கை, கடையின் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுதிநேர கடைகள் அமைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்