தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மு.க. ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.3.2022) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்தார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். இந்நிறுவனங்களால் 73,950 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 20 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இம்முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டது. அத்துடன் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவுகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாகவும், அயல்நாட்டு வேலைக்கான பதிவுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாகவும், தொழிற் பழகுநர் பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன், தொழில்நெறி வழிகாட்டல் வழங்குவதற்கென மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினால் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மே 2021 முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் 5,708 நிறுவனங்களும், 2,50,516 வேலைநாடுநர்களும் பங்கேற்றதில் 41,213 வேலைநாடுநர்கள் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் 517 மாற்றுதிறனாளிகளும் அடங்குவர்.

வேலைவாய்ப்பு முகாம் தொடங்கிவைத்து பார்வையிடும் முதல்வர்

கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சிகள் தொடங்கிவைத்தார்: தமிழக முதல்வர் விழா மேடையில், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக, அரசுப் பணிகளுக்காக பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பு அன்றாடம் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வி தொலைக்காட்சிவாயிலாக போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.ஆர்.ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, இ.கருணாநிதி, எழிலரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி, துணை மேயர் கோ. காமராஜ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

வாழ்வியல்

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்