புது டெல்லி: "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதி விசாரணை நடத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவே உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது" என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறியது: "வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கெனவே பரோலில் இருப்பதால், வழக்கு விசாரணை தாமதமாகும் என்று நீதிபதிகள் காலையில் தெரிவித்தனர். அப்போது, பரோலில் இருப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்தோம். அதன் அடிப்படையில், விடுதலை வழக்கை இறுதியாக விசாரிப்பதற்கு முன்பாக, ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதிகள் முடிவு செய்திருந்தனர்.
அதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ’மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோட்சேவுக்கே 14 ஆண்டுகளில் நிவாரணம் வழங்கிவிட்டனர். ஆனால், இந்த வழக்கிற்காக மத்திய அரசு சட்டத்தையே மாற்ற நினைக்கிறது. 302-வது சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது எனக் கூறுவது சரியானதல்ல’ என தமிழக அரசுத் தரப்பில் வாதிட்டார். பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணனும் வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருமே சிறையில் உள்ளனர். இதுவரை இவர்கள் யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. சிலருக்கு பரோல் மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால் மட்டும் அல்லது, மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னர்தான் வழங்கப்பட்டு வந்தது.
இப்போதுதான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான நிபந்தனைகளும் கிடையாது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்ற உத்தரவு நடைமுறைகளின்படி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை, பேரறிவாளன் கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பமாக இருந்தது. ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் கருத்தாக இருந்தது.
இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறது. எங்களது தரப்பிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசுக்கு இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டுவந்து முடிக்கும் எண்ணம் இல்லை என்பது நீதிமன்றத்துக்கு தெரியவந்தது. எனவே, அதனால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதால், நளினி, முருகன் உள்ளிட்ட மற்ற அனைவருக்குமே ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
54 mins ago
விளையாட்டு
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
5 hours ago