ம.ந.கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தது: சில தொகுதிகளுக்கு தேமுதிக - விசிக இடையே இழுபறி

By எம்.மணிகண்டன்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இடையே கடந்த மாதம் இறுதியில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமானது. தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும் மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 110 தொகுதிகளை எப்படி பங்கிட்டுக் கொள்வது என மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் கடந்த 2 வாரமாக தொடர்ந்து பேசி வந்தன. இதில், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ம.ந.கூட்டணி யில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் 110 தொகுதிகளை ஓரளவு சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று முதலில் பேசினர். ஆனால், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக தொண்டர்கள் வலியுறுத்துவதாக வைகோ கூறினார். எனவே, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா 27 இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் மதிமுகவும் போட்டி யிடுவது என்று கடந்த 4-ம் தேதி பேசப்பட்டது.

ஆனால், ‘சிறிய கட்சிகள் சில ம.ந.கூட்டணிக்கு வருவதற்காக மதிமுகவை அணுகுகின்றன. எனவே, எங்கள் கோட்டாவில் அவர்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும்’ என்று வைகோ கூறினார். அதனடிப்படையில் மற்ற 3 கட்சிகளும் தலா ஒரு தொகுதிகளை விட்டுத்தர தயாராகின. அதன்படி, மதிமுகவுக்கு 32 தொகுதிகளும் மற்ற 3 கட்சிகளுக்கு தலா 26 தொகுதிகள் என்று தாயகத்தில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த் தையில் இறுதி செய்யப்பட்டது.

சாதகமான தொகுதிகள்

இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள், தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷிடம் கொடுத்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகளின் பட்டியலில் உள்ள சுமார் 10 தொகுதிகளை தேமுதிகவும் கேட்கிறது.

திருமாவளவன், செல்வப்பெருந் தகை போன்றவர்கள் விசிக சார்பில் வெற்றி பெற்ற மங்களூர் தொகுதி, மறுசீரமைப்பில் திட்டக் குடி ஆனது. அந்த தொகுதியில் கடந்த முறை தேமுதிக சார்பில் தமிழழகன் வெற்றி பெற்றார். அந்த தொகுதியை தேமுதிக கேட்கிறது.

அதேபோல் கடந்த தேர்த லில் தேமுதிக வெற்றி பெற்ற எழும்பூர், கெங்கவல்லி போன்ற தொகுதிகளையும், செய்யாறு,மதுராந்தகம், பொன்னேரி, கள்ளக்குறிச்சி, கே.வி.குப்பம், பெரம்பலூர், காட்டுமன்னார் கோவில் என வடமாவட்டங்களில் விசிக கேட்கும் தனித்தொகுதிகளை விட்டுக் கொடுக்க தேமுதிக தயங்குகிறது. குறிப்பிட்ட இந்த 10 தனித் தொகுதிகளை பெற்றே தீர வேண்டும் என்று விசிக தீவிரமாக போராடி வருகிறது. இது தொடர்பாக விஜயகாந்தை நேற்று மதியம் சந்தித்து திருமாவளவன் பேசினார்.

மாமண்டூரில் வரும் 10-ம் தேதி நடக்கவுள்ள ம.ந.கூட்டணி - தேமுதிக மாநாட்டில் ஒவ்வொரு கட்சி சார்பில் தலா 10 வேட்பாளர்களையாவது முதல் கட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். அதற்காக நாளைக்குள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

28 mins ago

சினிமா

50 mins ago

க்ரைம்

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்