புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து மின் ஊழியர்கள் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மின்துறையை தனியார்மயமாக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மின்துறை போராட்டக் குழுவினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்தனர். ஊழியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்துறை தலைவர் சண்முகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மின்துறை தலைமை அலுவலகம், துணைமின் நிலையங்கள், மின்துறை அலுவலகங்கள், மின் விநியோக அலுவலகங்கள் ஆகிய இடங்களில் போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று காலை மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம் அருகே திரண்டனர். மின்துறை தலைமை அலுவலகத்தின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து போலீஸார் தடுத்தனர். தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்களை மட்டும் பணிக்கு செல்ல அனுமதித்தனர்.
இதனால் போலீஸாருடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல மின் விநியோக அலுவலகம், துணை மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சாரை, சாரையாக மின்துறை தலைமை அலுவலகம் அருகே கூடினர்.
அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் தனியார்மயத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தனியார்மய கொள்கையை திரும்பப்பெறக்கோரியும், கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படாதே என கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழகம், கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஊழியர்களின் போராட்டத்தால் புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மின்கட்டண வசூல் மையங்கள் மூடப்பட்டது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
17 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
26 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago