பொய்யாமொழியுடனான நட்புக்கு மரியாதை: மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் மகேஷுக்கு முக்கியத்துவம்

By அ.வேலுச்சாமி

திருச்சி மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள மு.க.ஸ்டாலினின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், முன்னாள் எம்எல்ஏ பொய்யாமொழியின் மகனுமான மகேஷ் பொய்யாமொழி, தற்போது திமுக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளராக உள்ளார். மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக விளங்கும் மகேஷ் பொய்யாமொழி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி திருச்சிக்கு வந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு அல்லது கிழக்கு தொகுதியில் இவர் போட்டியிடலாம் என திமுகவினர் மத்தியில் பேச்சு எழுந்தது. மாவட்டச் செயலாளராக உள்ள கே.என்.நேரு, மீண்டும் திருச்சி மேற்கு தொகுதியைக் கேட்டதால், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மகேஷ் பொய்யாமொழி விருப்ப மனு அளித்தார். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, திருச்சி கிழக்கு தொகுதி தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டுப் பெற்றது.

இதையடுத்து திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டார். இத்தொகுதிக்கு புதியவர் என்ற போதிலும், அவர் சார்ந்த சமுதாயம் மற்றும் திமுகவுக்கான வாக்குகள் கணிசமாக இருப்பதால் இங்கு வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில், திருவெறும்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரனை மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து மகேஷின் வெற்றிக்குப் பாடுபடுமாறு வலியுறுத்தினார். மேலும், நவல்பட்டு விஜி உட்பட இத்தொகுதியிலுள்ள திமுக முக்கிய பிரமுகர்களிடமும் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுமாறு ஸ்டாலின் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், வரும் 18-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவை ஆதரித்து உறையூர் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அவர் பேச உள்ளார்.

அதேபோல, திருச்சி கிழக்கு, ரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தலா 1 இடத்தில் மட்டுமே ஸ்டாலின் பேசி, ஆதரவு திரட்ட உள்ளார்.

ஆனால், மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் காட்டூர், திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் அருகில், துவாக்குடி அண்ணா வளைவு அருகில் என 3 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நட்புக்கு மரியாதை…

தனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கிய மறைந்த, அன்பில் பொய்யாமொழியின் மகன் என்பதால் மகேஷ் பொய்யாமொழியின் வெற்றிக்காக மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளிப்பது, நட்புக்கு அவர் அளிக்கும் மரியாதையைக் காட்டுகிறது. அதேபோல, மகேஷூக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மாவட்டச் செயலாளரும் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான கே.என்.நேருவுக்கும் அளிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்