சென்னை : கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, இல்லத்தில் இருந்தபடியே பொங்கலை கொண்டாடுங்கள், பொது இடங்களில் கூட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரையிடன் கூடிய பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
''பொங்கலோ பொங்கல்" என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. அந்த வகையில் நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை முதல் நாள் தமிழர் திருநாள், தை இரண்டாம் நாள் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் நாள் எனத் தைத்திங்களின் தொடக்கம் என்பது தமிழர் பெருவிழா நாட்களாக அமைந்துள்ளது.
புத்தாடை அணிந்து, புதுப்பானையில், புத்தரிசி படைத்து பொங்கல் இடும் நாள் என்பது தமிழர்கள் இல்லமே பொங்கி வழியும் நாளாக அமைந்து வருகிறது. வேளாண்மையைத் தொழிலாக இல்லாமல், பண்பாடாகக் கடைப்பிடிக்கும் இனம் தமிழினம். உழவே தலை என்றார் வள்ளுவர். அத்தகைய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் உயிர்ச் செல்வங்களாம் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தவகையில் எல்லாம் அடங்கிய இனிய திருநாள் தான் பொங்கல் திருநாள்.
அதிலும் இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்திருப்பதால் மக்கள் மனதில் அரசியல் பூரிப்பும் இணைந்துள்ளது. உங்களில் ஒருவனான நான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளேன். பொறுப்பேற்ற நொடியில் இருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி என உழைத்து வருகிறேன். எட்டே மாதத்தில் ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டி வருகிறேன்.
ஐந்தாண்டு செய்ய வேண்டிய சாதனைகளைச் சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டைப் பெற்றும் வருகிறேன். இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளைத்தான் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன். கரோனா காலம் என்பதால் கட்டுப்பாட்டுடன் நாம் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள். பொது இடங்களில் கூட வேண்டாம். இந்த அலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். அதுவரை உங்களையும் காத்து, நாட்டையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள், உழவர் உயிர்நாள், திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago