மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்தல்களில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் விலக்கு அளித்து வந்துள்ளது. அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர், 3 கட்டங்களாக பயிற்சி வழங்கி தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, இதரப் பணிகள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் வேளையில், அவர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டுமென, உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ‘மாற்றுத்திறனாளி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 1995-96-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் படி சமஉரிமை, சமவாய்ப்பு மற்றும் விதிவிலக்கு தளர்வு கோரும் உரிமை உள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1999-ல் இதற்கு அரசு ஆணை கூட பிறப்பித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட மாற்றுத் திறனாளிகள் விருப்பத்துக்கு விடப்பட்டன. ஆனால் இந்த தேர்தலுக்கு அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் விண்ணப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். கட்டாயத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துவிட்டால், அதன் பிறகு விலக்கு கேட்பது மிகவும் கடினம். எனவே உடனே இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளித்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
சமீபத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் பணி ஒதுக் கீட்டில் உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்புள்ளவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையமே இம்முடிவை எடுக்க முடியும்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் ஆணையம் மூலம் இதற்கான முன் முயற்சியை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி கூறும்போது, ‘தேர்தல் பணிக்கான ஆசிரியர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் கொடுத்து விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இப் பணியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அறிவிப்பு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவ்வாறு அறிவிப்புகள் ஏதேனும் வந்தால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுலா
11 hours ago
இந்தியா
11 hours ago