'அரசு அதிகாரிகள், காவல் துறையினரை மிரட்டும் திமுகவினர்; உடனடி நடவடிக்கை தேவை': முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுகவினர் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருவதையும், பட்டப் பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடைபெற்று வருவதையும், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், இன்னும் சொல்லப்போனால் காவல் துறையினரும் திமுக.வினரால் தினந்தோறும் மிரட்டப்படுவதையும், அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலைவிரித்து ஆடுவது பற்றியும் நான் எனது அறிக்கைகள் வாயிலாக சுட்டிக்காட்டி இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு பல வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

ஆனால் ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது. கடந்த எட்டு மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய உருவாகியுள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ஓர் ஒலிநாடா செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளளாக பணிபுரிவதாகவும், ஏலச் சீட்டு மோசடி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யக்கூடாது என தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், வழக்குப் பதியாததற்கு உரிய காரணத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாகவும் மணல் கடத்தினால் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று சில திமுக பிரமுகர்கள் தொல்லைக் கொடுப்பதாகவும், இதன் காரணமாக உளைச்சல் அதிகமாகி உள்ளதாகவும், திமுகவினர் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக் கொண்டு தன்னால் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த சார் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால், மற்றவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

குற்றம் செய்வதைத் தடுப்பதே காவல் துறையினரின் பணி. ஆனால், காவல் துறையினரையே குற்றம் செய்யத் தூண்டுகிறது திமுக.

குற்றங்களைக் கண்டுபிடிப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவதும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதும் அதன் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதும் தான் காவல்துறையின் கடமை. இது தான் மக்கள் அச்சமின்றி தங்களது அன்றாடப் பணிகளை கவனிக்க வழிவகை செய்யும்.

கடந்த 8 மாதங்களாக நடைபெற்ம் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தீயசக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது தெரிகிறது. பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலையும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு அந்த ஒலிநாடாவே சாட்சி.

சட்டம் - ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வரின் துறையிலே இதுபோன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல இதுபோல் எத்தனை 'அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம், திமுகவினரின் இதுபோன்ற அராஜகச் செயலுக்கு, சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பார் என்ற திருக்குறளை மனதில் நிறுத்தி, திமுகவினர் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்கள் தங்கள் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும், சார் ஆய்வாளர் சீனிவாசனை மிரட்டிய திமுகவினரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்ட்டனை பெற்றுத் தரவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கவும் உறுதியான நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

53 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்