பொன்னேரி அருகே திருப்பாலைவனம் பகுதியில் பட்டா பெயர் மாற்றத்துக்காக நில அளவீடு செய்து, பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - ஆலாடு சாலையைச் சேர்ந்த ரவி என்பவர், கடந்த 2009-ம்ஆண்டு, பொன்னேரி அருகே திருப்பாலைவனம் பகுதியில் உள்ள தன் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பட்டாபெயர் மாற்றத்துக்காக நில அளவீடு செய்து, வட்டாட்சியரிடம் பரிந்துரைக்க, அப்போது, பொன்னேரி வட்டம் - திருப்பாலைவனம் பிர்கா சர்வேயராக பணிபுரிந்த, பெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி, சர்வேயர் கணேசன் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, கணேசனை கையும், களவுமாகப் பிடிக்க முடிவுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி, சர்வேயர் கணேசனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.2,000 நோட்டை லஞ்சமாக ரவி அளித்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் லஞ்சம் வாங்கிய கணேசனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், கணேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
ரூ. 40 ஆயிரம் அபராதம்
இதனையடுத்து, நேற்று சிறப்பு நீதித்துறை நடுவர் இரா.வேலரஸ் தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், பட்டா பெயர் மாற்றத்துக்காக நில அளவீடு செய்து, பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கணேசனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
இந்தியா
50 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
5 hours ago