இலங்கை சிறையில் உள்ள 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழக மீனவர்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சிறை பிடிப்பதும், அவர்களுடைய படகுகளை சேதப்படுத்துவதும், அவர்களை மீன்பிடித் தொழில் செய்யாத அளவுக்கு துன்புறுத்துவதையும் இலங்கைக் கடற்படையினர் வாடிக்கையாகக் கொண்டிருந்தாலும், சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது மீனவ மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

18-12-2021 அன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றதாகவும், அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திருவாளர்கள் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ், லியோ ஆகியோருக்குச் சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்ததாகவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,

அவர்கள் இந்த மாதம் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணை மற்றும் கரோனா தொற்று குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைகாக ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.

தமிழக மீனவர்களை அடிக்கடி சிறைபிடித்து துன்புறுத்தும் இலங்கைக் கடற்படையினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சர்வதேச கடல் எல்லையை தாண்டினார்கள் என்ற காரணத்தைச் சொல்லி அடிக்கடி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டு மீனவர்களிடையே ஒருவித அச்ச உணர்வையும், அமைதியின்மையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு முறையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போதும் ஒருவித அச்ச உணர்வோடுதான் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏதோ சம்பிரதாயத்திற்காக கடிதம் எழுதுவது அல்லது தொலைபேசியில் பேசுவது என்ற பணியைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் மீன்பிடி உரிமையை காப்பது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு இருக்கிறது.
இந்தக் கடமையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக மீனவர்களின் - எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்கவும், உடைமைகளை அவர்களிடம் ஒப்படைக்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நிகழாமல் இருக்கவும் உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமாக எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்