புதுவை பிஆர்டிசிக்கு 200 புதிய பேருந்துகள்; பெண்களுக்குத் தனியாக இலவசமாக பிங்க் பேருந்து இயக்க முடிவு: அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் பிஆர்டிசிக்கு மத்திய அரசு மூலம் புதிதாக 200 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம். அதில் பெண்களுக்குத் தனியாக பிங்க் பேருந்து இயக்க முடிவு செய்துள்ளோம். இதில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அறிவிப்பு வெளியிடுவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

"போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் உரிமம் பெற வசதியாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமம் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும். பிஆர்டிசியில் 164 பேருந்துகள் உள்ளன. 90 பேருந்துகள் மட்டுமே இப்போது இயக்கப்படுகின்றன. பழுது காரணமாக மற்ற பேருந்துகள் இயக்கப்படவில்லை. சிறிய பழுதடைந்த பேருந்துகளைச் சீரமைத்துக் கூடுதலாக இயக்கி வருகிறோம்.

கரோனா காலத்தில் 10 வால்வோ பேடுந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அந்த நிறுவனம் மூலம் குறைந்த செலவில் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வால்வோ பேடுந்துகளைச் சீரமைக்க அதிக செலவானால் அவற்றை அந்த நிறுவனத்திடமே கொடுத்துப் புதிய பேருந்துகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பிஆர்டிசியில் டிக்கெட் பரிசோதகர்கள் குறைவாக உள்ளனர். இதனால் தமிழக அரசு நிறுவனத்தோடு இணைந்து பேருந்துகளைப் பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளோம். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்ததால் பிஆர்டிசி பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டு வருமானம் முன்பைவிட இருமடங்கு உயர்ந்துள்ளது.

பிஆர்டிசியை மீண்டும் லாபகரமாக இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மூலம் புதிதாக 200 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்குத் தனியாக பிங்க் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் செல்கின்றனர். அதேபோல பிங்க் பேருந்து இயக்கப்படும்போது பெண்கள் இலவசமாகப் பயணிக்க அறிவிப்பு வெளியிடுவோம். பேருந்து நிறுத்தங்களில், பேருந்துகளில் கேமரா பொருத்தவும், ஜிபிஎஸ் இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிஆர்டிசி ஊழியர்களின் 5 மாத நிலுவை சம்பளம் வழங்கியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பரிசீலித்து வருகிறோம்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் பணம் வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பாண்டெக்ஸ், பாண்பேப், அமுதசுரபி மூலம் இலவசத் துணிகளைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது கையெழுத்துப் பிரதிகள் தொடங்கி அனைத்து நூலகங்களிலும் உள்ள முக்கிய ஆவணங்கள், நூல்களை டிஜிட்டலாக்குவோம்".

இவ்வாறு அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

22 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

57 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

42 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்