இந்த ஆண்டு 80% அதிகமாக பெய்துள்ளது; தமிழகம், புதுச்சேரியில் இனி மழை குறையும்: சென்னை வானிலை மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று கூறியதாவது:

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.1-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 2-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 16 செ.மீ., களியலில் 14 செ.மீ., சிற்றாறில் 13 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 12 செ.மீ., புதுச்சேரி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 30-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. அது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. மழை குறையவே வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் மழை குறைந்துவிடும். அவ்வப்போது மழை இருக்கும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 2 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த அக்.1 முதல் நவ.29 வரை 63 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 35 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 80 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. சென்னையில் இதே காலகட்டத்தில் 113 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக 61 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 83 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் மட்டும் 102 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு தற்போது வரை 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களில் 100 செ.மீ. ஆக உயரும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. எனவே, நவம்பர் மாதத்தில் அதிகபட்ச மழை பெய்த ஆண்டாக 2015-ம் ஆண்டே நீடிக்கும். இந்த ஆண்டு நவம்பரில் புதுச்சேரி யில்தான் 102 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

20 mins ago

சுற்றுலா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்