பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்று உயராமல் இருப்பதை உறுதி செய்க: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

"பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.
எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து கரோனா தொற்று நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எந்தக் கட்டுபாடினையும் பின்பற்றாத சூழ்நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகின்றன.

ஜவுளிக் கடைகள், இனிப்பு, பட்டாசுக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கும்போது தீபாவளிப் பண்டிகையை விமரிசையாக மக்கள் கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

துர்கா பூஜை, நவராத்திரி விழா போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு மேற்கு வங்கம், அசாம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. பெரிய அளவுக்கு உயர்வு இல்லை என்றாலும், பண்டிகைக்கு முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது, மேற்கு வங்கத்தில் 10 விழுக்காட்டிற்கும் மேலும், அசாமில் 50%க்கு மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் 38%க்கு மேலும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வருவதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுமட்டுமல்லாமல், கரோனா நோய்த் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சீனாவில் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற சூழ்நிலையில்,சென்னை தி நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை, சென்னை புறநகர்ப் பகுதிகளில் புத்தாடைகளை வாங்கிச் செல்ல காலை முதலே பொதுமக்கள் வருவதையும், நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததையும், அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான கூட்டம் கூடுதலைத் தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றாததையும் காண முடிகிறது.

இந்த நிலை தான் பிற மாவட்டங்களிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற நிலைமை கரோனா நோய்த் தொற்றின் தாகத்தை அதிகரிக்க வழிவகுத்துவிடும். கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், இந்த தொற்று முற்றிலும் உலகத்தை விட்டு விரட்டப்படும் வரையில், பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதும், பண்டிகைக் காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும், ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும், பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு கரோனா தொற்றின் தாக்கம் பண்டிகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

40 mins ago

தமிழகம்

55 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்