மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு 12 பேர் உறுப்பினர்களைக் கொண்டது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 12 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 9 இடங்களையும், திமுக 3 இடங்களையும் வென்றது. இதனால் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும், தானேஷ் என்கிற என்.முத்துகுமார் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் தானேஷ் என்கிற என்.முத்துகுமார் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால், மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், அதிமுக சார்பில் தானேஷ் என்கிற என்.முத்துகுமார், திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அ.கண்ணையன் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அ.கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால், திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று (அக். 22) மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சவுந்தர்யா, உதவி தேர்தல் அலுவலர் முருகேசனிடம் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என, நேற்று மனு அளித்திருந்தனர்.
மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுகவைச் சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர் என, 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் வெளியே காத்திருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறி, திடீரென வெளியேறிப் புறப்படுவதற்காக காரில் ஏறினார்.
அப்போது, அதிமுகவினர் தேர்தலை ஒத்திவைத்துவிட்டதாகக் கூறவே, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், வார்டு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கார் முன் அமர்ந்து காரை எடுக்கவிடாமல் தடுத்து மறியல் செய்தனர். மேலும், போலீஸார் மற்றும் எஸ்.பி. ப.சுந்தரவேலிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அதிமுகவினர் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 secs ago
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago