மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளைத் தளர்த்தக் கோரி அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் மனு தந்தனர்.
அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தந்த மனுவை இருக்கையில் அமர்ந்தபடி ஆணையர் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியைக் கடந்த மாதம் 22ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து முதல்கட்ட வேட்புமனுத் தாக்கலான 30-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. குளறுபடிகளைச் சரிசெய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து கடந்த வெள்ளிக்கிழமை 2-வது முறையாகத் தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டமும் நடத்தின.
திமுக மாநில அமைப்பாளர் சிவா, இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து 21-ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வர இன்னும் 10 நாட்கள் உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தொடருமா என்பது பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தாமல் தொடர் மவுனத்தில் இருந்தது.
இதையடுத்து சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இன்று காலை கூடி ஆலோசித்தனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் ஆகியோர் பேசினர். அதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸைச் சந்தித்தனர்.
அப்போது மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியாததால் தேர்தல் நடத்தை விதிகளைத் தளர்த்தக் கோரி ஆணையரிடம் கடிதம் தந்தனர். இருக்கையில் ஆணையர் அமர்ந்திருக்க, அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று மனுவைத் தந்தனர்.
மனுவை வாசித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஆலோசித்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அதைக் கடிதம் வாயிலாக தரக் கோரினர். அதைத் தருவதாகவும் ராய் பி தாமஸ் தெரிவித்தார்.
இதுபற்றி எம்எல்ஏக்கள் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திரும்பப் பெறத் தேர்தல் ஆணையரிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பதிலை நாளைக்குள் தெரிவிப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிட்டனர்.
இருக்கையில் அமர்ந்தபடி ஆணையர் மனு பெற்றது தொடர்பாக அதிமுக தேர்தல் பிரிவுச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கூறுகையில், "தேர்தல் அதிகாரி தேர்தலில் வேட்பு மனுவைப் பெறும்போது மட்டுமே அவர் அமர்ந்து இருக்க சட்டத்தில் அனுமதியுண்டு. புதுச்சேரி மக்களால் தேர்வான அனைத்து எம்எல்ஏக்களையும் அவமதிக்கும் வகையில் அமர்ந்து மனுவை வாங்குவது ஜனநாயகப் படுகொலை" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 mins ago
வாழ்வியல்
14 mins ago
ஜோதிடம்
40 mins ago
க்ரைம்
30 mins ago
இந்தியா
44 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago