நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வடமாநில தொழிலாளியை புலி கொன்று தின்றது. புலியை பிடிக்க அதிரடிப்படை, வனத்துறை மற்றும் ஆயுதப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக புலியின் மனித வேட்டை தொடருவதால் அப் பகுதி மக்கள் பீதியடைந் துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வுட் பாரியர் எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் பணிபுரிந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி மது ஓரன் (50) என்பவரைக் காணவில்லை என்பதால், நேற்று காலை அவரது குடும்பத்தார் தேடினர். அப்போது, வனத்தில் அவரது தலை மற்றும் கால்கள் மட்டும் மீட்கப்பட்டன. தலை மற்றும் முகத்தில் புலி தாக்கிய காயங்கள் இருந்தன. மது ஓரனை புலி கொன்று தின்றது உறுதியானது. தலை மற்றும் கால்கள் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த வுட் பாரியர் பகுதி மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவியது. நீல கிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கூடலூர் வனக்கோட்ட அலுவலர் தேஜஸ்வி மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
கூண்டுகள், கேமராக்கள்
புலியைப் பிடிக்க உடனடியாக அப்பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அப்பகுதியில் தனியாக நடமாட வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. பந்தலூரிருந்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். புலியைப் பிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தை மேற்கு மண்டல ஐஜி தரன் ஆய்வு செய்தார்.
ஆட்சியர் பொ.சங்கர் கூறும் போது, ‘‘எஸ்டேட் தொழிலாளியை கொன்ற வன விலங்கை பிடிக்க 8 கூண்டுகள் மற்றும் 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இறந்த மது ஓரனுக்கு சூமாரி (48) என்ற மனைவியும், மனோஜ், ரஜிந்தர் ஆகிய மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ரூ.2.75 லட்சம் வழங்கப்படும். விலங்கை பிடிப்பது அல்லது சுடுவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
குடும்பத்தினர் சோகம்
பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் மது ஓரனின் உடல் வுட் பாரியர் எஸ்டேட்டுக்கு கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டது. மது ஓரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வுட் பாரியர் எஸ்டே ட்டில் பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது முதல் மகன் மனோஜுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், தனது சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அதற்குள் உயிரிழந்தது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 ஆண்டுகளாக தொடரும் சம்பவம்
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 பேரை புலி கொன்றது. 22 நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கப்பச்சி கிராமத்தில் அந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தமிழக எல்லையையொட்டி கேரள மாநில எல்லை மாவட்டமான வயநாட்டில் நூல்புழா வனப் பகுதியில் பாஸ்கரன் (60) என்பவரை புலி கொன்று, தின்றது. 4 நாட்களுக்குப் பின்னர் அப்பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பாட்டவயலில் மகாலட்சுமி என்ற பெண்ணை புலி கொன்றது. 5 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் அந்த புலி, சுட்டுக் கொல்லப்பட்டது.
முக்கிய செய்திகள்
மாவட்டங்கள்
17 secs ago
உலகம்
5 mins ago
தமிழகம்
10 mins ago
தொழில்நுட்பம்
35 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
மாவட்டங்கள்
1 hour ago