கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக, விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநரின் மனைவியிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் (50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீஸார் மறு விசாரணையைத் தொடங்கினர்.
மேற்கண்ட வழக்கு தொடர்பான சாட்சிகளை விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று (செப். 03) கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரகசிய இடத்தில் விசாரணை
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையிலான தனிப்படை போலீஸார் இன்று (செப். 04) கோவைக்கு வந்தனர். விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவியிடம் கோவையில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினர் விசாரித்தனர்.
கனகராஜ் உயிரிழந்தது எப்படி, இந்த வழக்கு தொடர்பாக அவர் ஏதாவது கூறியிருந்தாரா, சம்பவம் நடக்கும் முன்னர் அவரைச் சந்தித்த நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து விசாரித்தனர். மேலும், கனகராஜின் சகோதரர் விசாரணையில் கூறிய தகவல்கள், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களும் ஒத்துப்போகிறதா எனவும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி மேற்பார்வையில் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 mins ago
இந்தியா
4 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago