தஞ்சாவூர் அருகே இஸ்லாமியர்களின் பண்டிகையைக் கொண்டாடிய இந்துக்கள்: 300 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் பாரம்பரியம் 

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை ஒரு கிராம மக்கள் பத்து நாட்கள் விரதம் இருந்து, தீயில் இறங்கி மிகுந்த பயபக்தியுடன் கொண்டாடினர்.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையின்போது இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காசவளநாடு புதூர் கிராமத்தில் நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள் இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள “அல்லா சாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களைத் தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதிவுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதி விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் அல்லா சாமியை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இருவேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதிவுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி சென்றது.

பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அல்லா சாமியைத் தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் தீயில் இறங்கி நேர்த்திக் கடனைச் செலுத்தி வழிபட்டனர்.

இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர்.

இவ்விழாவைக் கொண்டாடும் போது, இந்த ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொகரம் திருவிழாவின் போது பிறந்த வீட்டுக்கு வந்த பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் "கரகம்" எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து இரவு முழுவதும் வீடு வீடாகச் சென்ற பின்னர், விடியற்காலையில் அல்லாவிடம் வேண்டிக்கொண்டு தீ மிதிக்க இறங்குவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

வாழ்வியல்

13 mins ago

ஜோதிடம்

39 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

43 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்