போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு: டிஜிபி, பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கலான மனு தொடர்பாக டிஜிபி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''வழக்கறிஞர் தொழில் புனிதமானது. அந்தத் தொழிலில் போலி வழக்கறிஞர்கள் அதிகரித்துள்ளனர். ஆட்டோ, கார், 3 சக்கர சைக்கிள் ஓட்டுபவர்கள், அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள், டெய்லர் மற்றும் முழு நேர அரசியல்வாதிகள் பலர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்ததாகச் சான்றிதழ் பெற்று பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்கின்றனர்.

இவர்கள் சட்டக் கல்லூரிகளுக்கு நேரில் செல்வதில்லை. போலி வருகைப் பதிவு சான்று அளிக்கின்றனர். இதற்கு புரோக்கர்கள் உள்ளனர். போலி வழக்கறிஞர்கள் பிரம்மாண்டமாகச் சட்ட அலுவலகம் அமைத்து மூத்த வழக்கறிஞர்கள் போல் தங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, வெளி மாநிலங்களில் சட்ட படிப்புப் படித்தவர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் சட்டப்படிப்பில் உண்மைத் தன்மையை ஆராயவும், அவர்கள் உண்மையில் வெளி மாநிலத்தில் தங்கிப் படித்தனரா? எந்த விடுதியில் தங்கியிருந்து படித்தனர்? எப்படி வருகைச் சான்றிழ் பெற்றனர்? என்பது குறித்துக் காவல்துறை உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி ஒருவரை நியமித்து விசாரித்து, சான்றிதழ் பெறவும், போலி வழக்கறிஞர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். மனு தொடர்பாகத் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்