மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணம்: திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By ஆர்.பாலசரவணக்குமார்

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி, மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படிச் செலவிடப்பட்டது என, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.12) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் குடும்பத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து, ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், 2021-ம் ஆண்டு எந்த உதவியும் பெறவில்லை என்றும் வாதிட்டனர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 சதவீதக் கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாகத் தெரியவில்லை எனவும், அவர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

சமீபத்திய அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும் எனவும், அந்த திட்டம் அடுத்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்து, விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்