தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 439-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக பேராலய வரலாற்றில் தொடர்ந்து 2-வது ஆண்டாக பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல 439-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமா தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் யாரும் இல்லாமல் கொடியேற்ற விழா இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் அதிகாலை 5.30 மணிக்கு பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணியளவில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஏற்றி வைத்தார். இதில் பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் அருட்தந்தையர்கள், பேராலய நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சுமார் 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமாக கொடியேற்ற விழாவில் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த பகுதியே மனித தலைகளாக காட்சியளிக்கும். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கொடியேற்ற விழா நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்வும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் சில உள்ளூர் தொலைக்காட்சிகள், யூடியூப் மற்றும் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டனர்.
ஆண்டு பெருவிழா வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா முழுவதுமே பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. மக்கள் அதிகம் கூடும் நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகிய முக்கிய நிகழ்வுகள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி வழக்கம் போல நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணியளவில் திருவிழா சிறப்பு மாலை ஆராதானையும், ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலியும் ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.
ஆனால், பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி, யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேராலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இறைமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
23 mins ago
ஜோதிடம்
28 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago