மக்களின் பாதுகாப்பான பயணம்: சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

By செய்திப்பிரிவு

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (12.7.2021) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், புதுப்பித்தல், பராமரித்தல், புறவழிச்சாலை / சுற்றுச்சாலை அமைத்தல், புதிய பாலங்களைக் கட்டுதல், பழைய பாலங்களைச் சீரமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் கட்டுதல், ரயில்வே கடவுக்கு பதிலாகச் சாலை மேம்பாலம் / கீழ்ப்பாலம் கட்டுதல், சாலை சந்திப்புகள் / குறுகிய வளைவுகளை மேம்படுத்துதல், சாலைப் பாதுகாப்புப் பணிகள், சாலையின் இருபுற ஓரங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர், வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் முறையாகத் திட்டமிட்டு, விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பணிகளின்போது இதர அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், மத்திய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்ட சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் பணிகளான துறைமுகங்களை நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், சிறு துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளுதல், பயணிகள் படகுப் போக்குவரத்து, கன்னியாகுமரி - விவேகானந்தர் பாறையில் படகுத் தோணித்துறை நீட்டிப்பு குறித்தும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்