ஜூலை 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; கடைகள் திறக்க கூடுதல் நேரம்: திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இம்முறை கடைகள் திறக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்க அனுமதி மறுப்பு தொடர்கிறது.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

எவை எவைக்குத் தடை?

· மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

· மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து

· திரையரங்குகள்

· அனைத்து மதுக்கூடங்கள்

· நீச்சல் குளங்கள்

· பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

· பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

· பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

· உயிரியல் பூங்காக்கள்

· நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

· இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்துப் பகுதிகளிலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கெனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

Ø புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

Ø ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களைத் தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.

Ø உணவகங்கள், தேநீர்க் கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனைக் கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

Ø கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

Ø கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

Ø குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டுப் போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

Ø கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

· நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

· கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

· நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

· நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், நோய்த் தொற்றுப் பரவலைக் கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தொடர்புடைய துறைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள சிகிச்சை மையத்தை அணுக வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்