திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமம் தமிழகத்திலேயே முதலாவதாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (ஜூன் 24) சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்களிடையே கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணத்தால் கிராமங்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரிய அளவில் பெருகி இருக்கிறது.
இதுவரை 1,38,15,660 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. அதில், 1,28,27,184 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 3 லட்சம் வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நாகை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டபோது, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதிகளிலெல்லாம் முழுவதுமாகத் தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளோம். அந்த வகையில், அங்கும் 100 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசி முழுவதுமாக செலுத்திடும் பணிகள் வேகமாக மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனின் தீவிர முயிற்சியினால் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள கருணாநிதியை தமிழகத்திற்குத் தந்த அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் எனும் கிராமம் முன்மாதிரி கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட கிராமம் என்ற நற்பெயரை காட்டூர் கிராமம் பெற்றிருக்கிறது.
இந்தியாவிலேயே காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம், வேயாண் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இக்கிராமத்தில் மொத்தம் 3,332 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 18 வயதுக்கும் கீழே 998 பேர், அதாவது, கர்ப்பிணிகள் தடுப்பூசிகள் செலுத்த முடியாதவர்கள், மருத்துவ ரீதியாகத் தடுப்பூசி போடக்கூடாதவர்கள் தவிர 2,334 பேர் ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம், தமிழகத்திற்கு இதுவொரு முன்மாதிரி கிராமமாக இருந்துகொண்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள், சிறப்புமிக்க நினைவிடங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடுகிற இடங்களில் முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்திடுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற நிலையை உருவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 23.3.2020 முதல் 6.5.2021 வரை 1,466 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கான ஒதுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூபாய் 6 கோடியே 95 லட்சம் ஆகும். 7.5.2021 பிறகு முதல்வரின் தலைமையின் கீழ் பொறுப்பேற்ற அரசு அறிவித்துள்ள புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 7.5.2021 முதல் 23.6.2021 வரை பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 20,938. இவர்களுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற காப்பீட்டுத் தொகை ரூபாய் 266 கோடியே 48 லட்சம்.
அதேபோல, கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவோருக்கும் காப்பீடு கிடைக்க வேண்டும் என்ற வகையில், அவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 7.5.2021 முதல் 423 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறத் தொகை 1 கோடியே 27 ஆயிரமாகும்.
காப்பீட்டுத் திட்டத்தில் தவறிழைத்த 40 மருத்துவமனைகளின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் சரியாக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கிறார்களா? என்று அறிய நானும், துறை முதன்மைச் செயலாளரும் திடீரென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் சிகிச்சை பெற்ற பிறகு இல்லம் சென்ற பின்பும் அவர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்துள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
35 secs ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago