தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்திருந்தால் எனக்கு கரோனா தொற்று வந்திருக்காது. இவை இரண்டையும் செய்யாததால்தான் பாதிக்கப்பட்டேன் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 1954-ம் ஆண்டு முதல் ஜிப்மர் நகர சுகாதார மையம், செஞ்சி சாலை, படேல் சாலை சந்திப்பில் செயல்படுகிறது. இந்த மையத்தின் கட்டிடம் பழுதானதால் ரூ.5 கோடி செலவில் 3 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
"ஆரம்பத்தில் நான் முகக்கவசம் அணியவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. சாதாரணமாக இருந்தேன். அதனால் முதல்வராகப் பொறுப்பேற்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்டேன். பிறகு சிகிச்சை பெற்றுத் திரும்பினேன். கரோனா தொற்று வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது மக்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.
இப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியை நாம் போட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. ஏனென்றால் நான் தடுப்பூசி போடாததால் பாதிக்கப்பட்டேன். தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்திருந்தால் எனக்கு கரோனா தொற்று வந்திருக்காது. இவை இரண்டையும் செய்யாததால்தான் பாதிக்கப்பட்டேன்.
யாரோ ஒருவர் பரப்பும் வதந்தியை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர மறுப்பது தவறானது. தடுப்பூசி போடவில்லை என்றால், பெரிய சிரமம் ஏற்படும். 2 டோஸ் போட்டுக் கொள்ளாததால் கரோனா சிகிச்சையின்போது மருத்துவமனையில் எனக்கு 100 ஊசிகள் போட்டார்கள். அந்த 2 டோஸைப் போட்டிருந்தால் எனக்குப் பிரச்சினை இருந்திருக்காது.
சிலர் நோயின் தன்மை தெரியாமல் காலதாமதமாக மருத்துவமனைக்குச் செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நோயின் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் சொல்வதுபோல் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தொற்று பரவாமல் இருக்கும். கரோனா பிரச்சினையும் இல்லாமல் போகும்.
எதிர்காலத்தில் 3-வது அலை வரும் என்கிறார்கள். அதுபோன்று ஒரு அலை ஏற்படும்போது கரோனா வராமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் தடுப்பூசி கேட்டுள்ளோம். மத்திய அரசு நிச்சயமாக நமக்குத் தேவையான தடுப்பூசியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது."
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
6 hours ago