பிளஸ் 1 வகுப்பு பாடப்பிரிவுகளுக்குத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது பல மாணவர்களது வாய்ப்பை தட்டிப் பறித்துவிடும். விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்புகளைத் திறந்து அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 10 முதல் 15% மாணவர்களைச் சேர்க்கலாம், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ, அதைவிட குறைவாகவோ விண்ணப்பம் பெறப்பட்டால், நுழைவுத் தேர்வின்றி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரிவை ஒதுக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்களைக் கொண்ட, சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான, நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி, மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் எனப் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இதுகுறித்து ஆட்சேபித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதிய கடிதம்:
“தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களை விட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயார் செய்து தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை, எளிய கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மாணவர்கள் மத்தியிலும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு 9, 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1 வகுப்பு பாடப்பிரிவுகளுக்குத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது பல மாணவர்களது வாய்ப்பைப் தட்டிப் பறித்துவிடும். எனவே, அரசுப் பள்ளிகளில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்புகளைத் திறந்து அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும்,
1. பிளஸ் 1 வகுப்பிற்குத் தேர்வு என்ற பள்ளிக் கல்வி ஆணையரின் உத்தரவை மாற்றியமைத்திட வேண்டும்.
2. சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும்.
3. பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பாடப்பிரிவை மறுக்காமல் வழங்கிட வேண்டும்.
4. மிக அதிக அளவில் விண்ணப்பம் வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கி விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வியைத் தொடர வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
விளையாட்டு
28 mins ago
இந்தியா
54 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago