'டவ் தே' புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'டவ் தே' புயலில் காணாமல் போன நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்களின் குடும்பத்திற்கு, ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"13.05.2021 அன்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 'டவ் தே' புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. இருப்பினும், கீழ்க்கண்ட 2 நிகழ்வுகளில் 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகத் தகவல் பெறப்பட்டது.

1) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த IND-TN-06-MM- 5517 (முருகன் துணை) பதிவெண் கொண்ட படகு, லட்சத்தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலுள்ள 9 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

காணாமல் போன 9 மீனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வலியுறுத்தி, தமிழக முதல்வரால் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு மீட்புப் பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் 'விக்ரம்' மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், லட்சத்தீவு நிர்வாகியின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடலில் மூழ்கிய 'முருகன் துணை' பெயர்கொண்ட மணிகண்டன் என்பவரது மீன்பிடிப் படகுடன் ஒன்றாகச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இதர 2 மீன்பிடி விசைப்படகுகளில் சென்ற 23 மீனவர்களும், காணாமல் போன 9 மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடித்திட இயலவில்லை.

2) கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சபிஷ், என்பவருக்குச் சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் IND–KL–07–MM-4989இல் 05.05.2021 அன்று 16 மீனவர்களுடன் கேரள மாநிலம் பைபோர் (Beypore) மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 'டவ் தே' புயல் கடந்த பின்பு அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

முன்னதாக, இந்திய கடலோரக் காவற்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோரக் காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காணாமல் போன 21 மீனவர்களைத் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்து மீட்கக் கோரி முதல்வர் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

'டவ் தே' புயல் காரணமாக காணாமல் போன நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் (மொத்தம் 21 மீனவர்களும்) மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் என்பதாலும், காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் கடலோரக் காவற்படையின் கப்பல் மூலம் 15.05.2021 முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும் 21 மீனவர்களையும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது.

எனவே 'டவ் தே' புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்