தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கமுதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மீன்வளத் துறைஅமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலில் மீன்வளத்தைப் பேணிக் காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பைச் சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
முதல்வர் உத்தரவுப்படி நடப்பாண்டுக்கு 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகைதலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்காக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி (பகுதி) ஆகியவற்றைச் சேர்ந்த 1 லட்சத்து46 ஆயிரத்து 598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த25 ஆயிரத்து 402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரம் பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
தமிழகம்
13 mins ago
சினிமா
19 mins ago
கருத்துப் பேழை
9 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago