திமுக மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய ஆலோசனைக் கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். தெற்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அறிவாலயம் அருகே வி.என்.நகரில் உள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று (மே 16) இணைய வழியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது. தொடர்ந்து, இது தொடர்பாக, தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், கட்சி அலுவலகத்தில் கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாகவும், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாகவும், லயன்ஸ், ரோட்டரி ஆகிய சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் ஏ.அருண், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், அரசுத் துறை அதிகாரிகளைக் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேலிக்கூத்தாகவும், தவறான முன்னுதாரணமாகவும் உள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முன்னாள் எம்.பி.யும், அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான ப.குமார், இன்று (மே 18) தமிழ்நாடு ஆளுநருக்கு புகார் மனு அனுப்பினார். மேலும், சில பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது.
இதனிடையே, அந்தக் கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "கரோனா பேரிடரைச் சமாளிக்க உதவக் கோரி, திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்க நிர்வாகிகளுடன் என் அலுவலகத்தில் நேற்று உரையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்ற என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் என் அலுவலகத்துக்கு வந்தனர்.
கரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காக்கும் வகையில் சேவை மனப்பான்மை உள்ள ஒற்றைக் கருத்துள்ள நபர்கள் சந்திக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிகாரிகள் அதில் பங்கேற்று சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மற்றபடி, அந்தக் கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடத்தப்பட்ட கூட்டம் அல்ல.
அரசு ஊழியர் என்ற முறையில், கட்சி அலுவலகத்தில் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, சில பத்திரிகைளில் வந்த செய்திபோல், முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
51 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago