தமிழகத்தில் 77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி சார்பாக, சென்னை லயோலா கல்லூரியில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட கரோனா நோய்ப் பரவல் தடுப்பு மையத்தை இன்று (மே 17) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து, கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நேற்று சென்னை, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 33 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் 100 படுக்கை வசதிகொண்ட கோவிட் சிகிச்சை மையமும், சென்னை விருகம்பாக்கத்தில் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 40 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் 100 படுக்கை வசதிகொண்ட கோவிட் சிகிச்சை மையமும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட நோய்ப் பரவல் தடுப்பு மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்திற்கென பிரத்யேக தொலைபேசி எண் 90254 52222 அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி, அரசு பொது மருத்துவமனைகளில் 995 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 595 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சியின் முயற்சியினால் இன்று வரவுள்ளன. இதனை ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படும் மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பும் பணி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 11,800 களப் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இதனால், நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மனநிறைவைத் தருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மண்டலவாரியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சைகளை அளிக்கும் முறை மாநகராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை முற்றிலுமாக அழிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை முகாம்கள் அமைக்கப்பட்டு தினமும் 30,000 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழக முதல்வர் 1.5 கோடி தடுப்பூசியை மத்திய அரசின் மூலமும், மீதமுள்ள 3.5 கோடி தடுப்பூசியினை உலகளாவிய டெண்டர் மூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்