கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க சேத்துப்பட்டு பராமரிப்பு மையத்தில் நூலகம் அமைக்கப் பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள், மன அழுத்தத்தில் இருப்பது, உளவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களது மன அழுத்தத்தை போக்க, அவர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களது சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க, திருவண்ணா மலை மாவட்டம் சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் கரோனா பராமரிப்பு மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிகண்ட பிரபுவின் முயற்சியால் ‘நூலகம்’ எனும் வாசிப்பு அரங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எதிர்மறை சிந்தனைகளுடன்
இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழிடம் மருத்துவர் மணிகண்ட பிரபு கூறும்போது, “சேத்துப்பட்டு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 102 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை பரிசோதனை செய்யும் போது, சோகத்துடன் இருப்பதை காண முடிந்தது. மேலும், வாட்ஸ்-அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெறும் கரோனா பற்றிய தகவல்களை அதிகளவில் படிப்பதால் எதிர்மறையான சிந்தனை களுடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மனநல மருத்துவர் புவனேஸ்வரனை வரவழைத்து, சிகிச்சை பெறுபவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப் பட்டு, அவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அப்போது புத்தகங்களை வாசிப்பதற்கு உதவ வேண்டும் என பலரும் கேட்டனர். அதன்மூலம் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களை பார்ப்பது தவிர்க்கப்பட்டால், மன அழுத்தம் குறையும் என கருத்து தெரிவித்தனர்.
அதேபோல், கேரம் மற்றும் சதுரங்கம் (செஸ்) போன்ற விளையாட்டிலும் சிலர் ஆர்வமாக இருப்பது தெரிந்து கொள்ள முடிந்தது.
விரைவாக நலம் பெறலாம்
இதைத்தொடர்ந்து, தி.மலை அடுத்த வேடியப்பனூரில் உள்ள ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனர் மதனை தொடர்பு கொண்டு, பராமரிப்பு மையத்துக்கு புத்தகம் தேவை என தெரிவித்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில், 500 புத்தகங்கள் வந்து சேர்ந்தன. மேலும், டிவிஎஸ் அமைப்பு மூலமாக கேரம் போர்டு மற்றும் சதுரங்கம் (செஸ்) பெறப்பட்டது. இதையடுத்து, மையத்திலேயே நூலகம் கட்டமைக்கப்பட்டது.
இப்போது, சிகிச்சை பெறுபவர்கள், நூல்களை வாசித்து வருகின்றனர். இதன்மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்து விரைவாக நலம்பெற முடியும்” என்றார்.
புத்தகங்களை வழங்குவோம்
இதுகுறித்து ரேகன்போக் நிறுவனர் மதன் கூறும்போது, “எங்களது அமைப்பு மூலம் 7 ஆண்டுகளாக நடமாடும் நூலகம் செயல்படுகிறது. 14 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி வருகிறோம். வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கேட்டுக் கொண்டதன் பேரில், சேத்துப்பட்டில் உள்ள பராமரிப்பு மையத்துக்கு சிறுகதைகள், நாவல்கள், அறிவியல், உடல் ஆரோக்கியம், தத்துவ அறிஞர்களின் புத்தகங்கள் என 500 புத்தகங்களை கொடுத்துள்ளோம். பிற மருத்துவமனைகளுக்கு புத்தகங்களை வழங்க தயாராக உள்ளோம்” என்றார்.
இது போன்ற முயற்சியை தமிழகம் முழுவதும் மேற்கொண்டால், தொற்றாளர்களுக்கு மன உறுதி ஏற்பட்டு, நல்ல பலனை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
விளையாட்டு
26 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago