தடுப்பூசி பற்றாக்குறை; அலுவலர்கள் முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 13) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஆட்சியர் அண்ணாதுரை வரவேற்றார். எஸ்.பி. ராதாகிருஷ்ணன், துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

"முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை என்று நண்பர் ஒருவர் என்னிடம் தகவல் தெரிவித்தார். உடனே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை தொடர்புகொண்டு தேவையான தடுப்பூசிகளை உடனே அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டதன்பேரில் இன்று தடுப்பூசி வந்துள்ளது.

மற்றவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே அலுவலர்கள் முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை உடனே நிவர்த்தி செய்ய வசதியாக இருக்கும்.

அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணிக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 11 மணிக்கு மேல்தான் தடுப்பூசி போடப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது முழு ஊரடங்கு காலம் என்பதால் 12 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரக்கூடாது. எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணிக்கெல்லாம் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விழுப்புரம் சரக டிஐஜியும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அலுவலரக்ள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் பொதுமக்களும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். அதிகாரிகள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில்வே மருத்துவமனையை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லட்சுமணன் எம்எல்ஏவும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கு அடுத்த நாளிலிருந்து நேற்றுவரை 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினரும் தெரிவித்தனர்.

இதனைத் தொடந்து, முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவனையில் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணிக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.900 மதிப்பிலான பல்ஸ் ஆக்சிமீட்டர் ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கி வைத்துக்கொண்டு, உடலில் ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்து கொண்டு, சிகிச்சைக்கு வரவேண்டும்.

இதுவரை 460 படுக்கைகள் உள்ளன. இன்று மேலும் 200 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 660 படுக்கைகள் உள்ளது. நகாய் ( NHAI தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒழுங்குமுறை ஆணையம்) மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது வந்துவிட்டால் ஆக்சிஜன் பற்றாகுறை தீர்ந்துவிடும். 360 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் உள்ளது.

திண்டிவனம், செஞ்சியில் உள்ள மருத்துவமனைகளில் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்கு இங்கு அனுப்பிவைக்கிறார்கள். தடுப்பூசிக்கு பதிலாக மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. பெரும்பாக்கத்தில் சித்த மருத்துவமனை இயங்கிவருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்