வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம்
சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் செயல்படுகின்றது. பேரிடர் காலங்களில், வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்பட்டு, முன் எச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது.
அவசரக் காலங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு துரிதமாக எச்சரிக்கை செய்திகளை அனுப்ப ஏதுவாக, இந்த மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், அனைத்து வகையான தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பேரிடர் குறித்த தகவல்கள், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம், TNSMART செயலி, சமூக வலைதளம், மின்னணு, அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் இம்மையத்தினைத் தொடர்புகொள்ள முடியும். மேலும், பெரும் பேரிடர் காலங்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியோருடன் இணைந்து அரசு மேற்கொள்ளும் முன் எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்தும் ஊடகங்களின் வாயிலாக மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.
இந்த மையத்தில், மாவட்டங்களிலிருந்து தினமும், மழை விவரம் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித் துறையினரிடமிருந்து பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவர அறிக்கை பெறப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தினமும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவன்றி, இம்மையத்தில் உள்ள 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் தொடர்புடைய துறை / மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஊடகங்களில் வெளியாகும் மீட்பு / நிவாரணம் தொடர்பான செய்திகள்/ புகார்கள் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இம்மையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகம், பொதுத் துறை அரசுச் செயலாளர், முதன்மைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், காவல் துறைத் தலைவர், கூடுதல் காவல் துறை தலைவர் (செயல்பாடு), பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அனைத்து ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு 91 Satellite Phone-கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போது உள்ள கரோனா சூழலில் இந்த மையத்தில் இயங்கும் தகவல் தொடர்பு மையத்திற்கு, கரோனா மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், அவசர மருத்துவ உதவி, திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்வுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக மாவட்டங்களுக்கிடையே பயணிக்கத் தேவையான ஆவணங்கள் குறித்தும் விவரங்கள் கோரி வரப்பெறும் அழைப்புகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா நோய்த் தொற்று பேரிடராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 2019-2020 முதல் 2021-2022 (06.05.2021) முடிய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10,054.80 கோடி ரூபாய் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து ரூ.227.48 கோடி ரூபாயும், பி.எம்.கேர்ஸ் (PM CARES) நிதியிலிருந்து ரூ.41.43 கோடி கரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதர இயற்கை இடர்ப்பாடுகளுக்காக 2020-2021 முதல் 2021-22 முடிய ரூ.1,961.13 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மாநில நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் பேரிடர் காலங்களில் வரப்பெறும் தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் திறம்படப் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும், தற்போது மாநிலத்தில் நிலவி வரும் கரோனா சூழுலில், கரோனா நோய்த் தொற்று தொடர்பான விவரங்கள் கோரி தகவல் மையத்திற்கு வரப்பெறும் அழைப்புகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி துரிதமாக கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago