புதுச்சேரியில் மே 10 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மே 3) தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குப் புறநோயாளிகளாக வரும் கர்ப்பிணிப் பெண்கள் கரோனா பரிசோதனைக்காக இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஏற்கெனவே நான் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து எந்த வகையில் பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தேன். உள்நோயாளிகளுக்கு இங்கேயே பரிசோதனை செய்கிறார்கள். புறநோயாளிகளாக வரும் கர்ப்பிணிகள் வெளியே அனுப்பப்பட்டுதான் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன்.
புறநோயாளி கர்ப்பிணிப் பெண்கள் வெளியே சென்று அலையக்கூடாது என்பதனால், இங்கேயே பரிசோதனை செய்துகொள்ள, பரிசோதனை முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். சாலையில் வரும்போது மக்கள் நடமாட்டம் அதிக அளவு இருக்கிறது.
மக்கள் நலனுக்காகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர். முழுமையாகக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டுச் சென்றுவிடலாம். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான் அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆகவே, ஒரே நேரத்தில் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு, சாலையில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு சாலையில் நடமாடுவதைத் தவிர்க்கவில்லை என்றால், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டி வரும். உங்களுக்கு (மக்கள்) கொடுக்கப்படும் சில சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, வெளியே நடமாடும்போது கரோனா அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இன்று வரை அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடியிருக்கும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இது அடுத்த திங்கள் கிழமை (மே 10) வரை நீட்டிக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அது, அனைவரும் வீட்டிலேயே இருங்கள். கட்டுப்பாடு சட்ட விதிகளின்படிதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில்லை.
மக்கள் கட்டுப்பாடோடு இருந்து, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் வீட்டிலேயே சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம். அவ்வாறு சுற்றினால் கரோனா தொற்றிக்கொள்ளும். அவசியமின்றி சுற்ற மாட்டோம், கரோனாவைத் தொற்ற விடமாட்டோம் என்ற உறுதியை மக்கள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உறுதியாக இருந்தால் ஒழிய கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது".
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
சினிமா
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago