சனாதனத்தை வீழ்த்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

சனாதனத்தை வீழ்த்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (மே 03) வெளியிட்ட அறிக்கை:

"சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து, ஜனநாயகத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றிய தமிழக வாக்காளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி, மகத்தான வெற்றியைப் பெற்று முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெறுவது, தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமின்றி, இரண்டு பொதுத்தொகுதிகளைப் பெற்று அந்த இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

போட்டியிட்ட ஆறு இடங்களில் நான்கு இடங்களை வென்றுள்ளோம். சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்து, ஆதரவளித்த தமிழக மக்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதற்காகப் பாஜகவும், அதிமுகவும் எத்தனையோ தில்லுமுல்லுகளைச் செய்தன. பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டன. வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும், பட்டியல் சமூக மக்களையும் கூறுபடுத்தி, அவர்களுக்கிடையில் பகைமையை உருவாக்கின.

மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்றன. அனைத்துச் சதிகளையும் முறியடித்து அவர்களைப் புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழக மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவை நல்கி மகுடம் சூட்டி இருக்கிறார்கள்.

முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும் விதமாகக் குடும்பம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் தருவோம் என, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி அந்த உதவித்தொகையை உடனே வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

33 secs ago

இந்தியா

3 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

16 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்