கரோனா பரிசோதனை முடிவுக்குக் காத்திராமல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 27 கர்ப்பிணிகளுக்கு கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தொற்றுப் பரவல் அதிகமாகிவரும் அதேவேளையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில், பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்று கருதி தனியார் மருத்துவமனைகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளும் அடங்குவர்.
இதனால், கடந்த மார்ச் மாதத்தில் 1,277 கர்ப்பிணிகளும், ஏப்ரலில் 890 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 1,230 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது தொடர்பாக மருத்துமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, "கோவை மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 1,046 கர்ப்பிணிகளைக் காப்பாற்றியுள்ளோம். மார்ச் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை ஏப்ரலில் 64 ஆக அதிகரித்தது. இதில், 40 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) முடிவு வெளியாகக் குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், அவசர சிகிச்சை தேவைப்படும்போது அவ்வாறு முடிவுக்காகக் காத்திருந்தால் தாய், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, முழுக் கவச உடை (பிபிஇ கிட்) உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அதில், 27 கர்ப்பிணிகளுக்குக் குழந்தை பிறந்த பிறகே கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கரோனா காலத்தில் மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் மனோன்மணி, இதர துறை மருத்துவர்கள், செவிலியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது" என்று டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
10 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
சினிமா
34 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago