புதிய கட்டுப்பாடுகள் அமல்: கோயில்களுக்கு வெளியே நின்று வழிபாடு செய்த பக்தர்கள்; பல்வேறு தொழில்களும் பாதிப்பு- நெல்லை, தென்காசி நிலவரம்

By த.அசோக் குமார்

தமிழக அரசு அறிவித்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். புதிய கட்டுப்பாடுகளால் பல்வேறு தரப்பினரும் தொழில்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன.

அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. மதுபானக் கடைகள் வழக்கம்போல் இயங்கின. மதுபானக் கூடங்கள் மூடப்பட்டதால் மதுபானம் வாங்கியவர்கள் பலர் திறந்தவெளியில் நின்று மதுபானத்தை அருந்திச் சென்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டன. கிராமப்பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகளில் வழக்கம்போல் சலூன் கடைகள் செயல்பட்டன.

உணவகங்கள், தேனீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. இவற்றில் பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதன்படி, உணவகங்களில் சாப்பிட சென்றவர்கள் பார்சல் வாங்கிச் சென்றனர். பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் கூறினர். வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்தனர்.

கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள், பந்தல் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள், உணவகம் மற்றும் தேனீர் கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கால் வாழ்வாதாதம் பாதிக்கப்பட்டு, மெல்ல இயல்புநிலை திரும்பிய நிலையில், மீண்டும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறும்போது, “பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் 50 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்த தடை செய்யப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாகவே உணவுப் பொருட்களை தயார் செய்தோம். ஆனால், அது கூட விற்பனையாகவில்லை. இருக்கும் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கடை வாடகை, மின் கட்டணம், தொழிலாளர்களுக்கு சம்பளம் போன்றவற்றைக் கூட வழங்க முடியாத நிலை உள்ளது.

தேனீர் பார்சல் வாங்குவது அரிதாகவே இருக்கும். தேனீர் விற்பனையும் கடுயைமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடையை திறந்து வியாபாரம் செய்வதால் நஷ்டமே ஏற்படும். இதனால் தொடர்ந்து கடை நடத்துவதா அல்லது மூடிவிடுவதா என்று தெரியாமல் உள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்