தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 80 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் சராசரியாக 1000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை. இன்றைய நிலவரப்படி 5000 டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. மேலும், திருநெல்வேலி மற்றம் மதுரையில் உள்ள குளிர்பதன கிடங்கில் தேவையான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நமது தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 180 கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்வதும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் நல்லது" என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago