திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கியது. கரோனா தடுப்பூசி செலுத்தும் திருவிழாவை ஏப்.26-ம் தேதி வரை நடத்த மாவட்ட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்.14-ம் தேதி தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கி ஏப்.26-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
''திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களுக்கு முன் இரு இலக்கத்தில் இருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 1,415 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் ஏப்.14 முதல் ஏப்.16-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் திருச்சி மாவட்டத்தில் ஏப்.26-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 82 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உட்பட 10 அரசு மருத்துவமனைகள், 42 தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 6,000 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மருந்துக் கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் முறையே 80:20 என்ற விகிதாச்சார அடிப்படையில்தான் வருகின்றன. இதன்படி, தற்போது மாவட்டத்தில் 700 பேருக்குச் செலுத்தும் அளவுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.
அதேவேளையில், கோவிஷீல்டு தடுப்பூசியுடன் சேர்த்தால் 7 நாட்களுக்குத் தேவைப்படும் கரோனா தடுப்பூசிகள் மாவட்டத்தில் இருப்பில் உள்ளன. எனவே, திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. ஓரிரு நாட்களில் அடுத்தகட்ட கரோனா தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்துக்கு வந்துவிடும்.
அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி போடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகியவை குறித்தும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் விரைவில் அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்ப்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனைக்குச் செல்வதுடன், முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்''.
இவ்வாறு மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
விளையாட்டு
40 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago